இல்லறவியல்

11. செய்ந்நன்றி அறிதல்

( பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல் )

101. செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
        வானகமு மாற்ற லரிது.

102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
        ஞாலத்தின் மாணப் பெரிது.

103. பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
        னன்மை கடலிற் பெரிது.

104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
        கொள்வர் பயன்றெரி வார்.

105. உதவி வரைத்தன் றுதவி வுதவி
        செயப்பட்டார் சால்பின் வரைத்து.

106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
        துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

107. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
        விழுமந் துடைத்தவர் நட்பு.

108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
        தன்றே மறப்பது நன்று.

109. கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
        வொன்றுநன் றுள்ளக் கெடும்.

110. எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
        செய்ந்நன்றி கொன்ற மகற்கு.



குறள் 101

செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.


சொல்லுரை:

செய்யாமல் - நாம் எந்த உதவியும் செய்யாதபோது

செய்த - நமக்கு அவர்கள் செய்த

உதவிக்கு - உதவிக்கு

வையகமும் - இம்மண்ணுலகமும்

வானகமும் - விண்ணுலகமும்

ஆற்றல் - ஈடாகக் கொடுத்தாலும்

அரிது - அவ்வுதவிக்கு ஒப்பாகாது


பொருளுரை:

நாம் எந்த உதவியும் செய்யாதபோது நமக்கு அவர்கள் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஈடாகக் கொடுத்தாலும் அவ்வுதவிக்கு ஒப்பாகாது.


விளக்கவுரை:

இக்குறள், தாம் பிறர் ஒருவரிடம் எந்தவித உதவி பெறாமலிருந்தும் பிறருக்கு உதவி செய்யும் பண்புடையவரின் உயர்தன்மையை எடுத்துரைக்கிறது. ‘செய்யாமல் செய்த உதவி’ உதவியினுள் முதன்மையானதாக வைக்கப்படுகிறது. அவ்வுதவிக்கு ஈடாக இவ்வுலகில் மட்டுமின்றி இந்த அண்டத்திலும் எதுவும் ஈடாகாது என்பதாம்.



குறள் 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது.

காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


சொல்லுரை:

காலத்தினால் - தக்க காலத்தில்

செய்த - செய்த

நன்றி - உதவி

சிறிதுஎனினும் - சிறிய அளவினதாயினும்

ஞாலத்தின் - உலகத்தைவிட

மாணப் - மிகவும்

பெரிது - பெரியது ஆகும்


பொருளுரை:

தக்க காலத்தில் செய்த உதவி சிறிய அளவினதாயினும் அது இந்த உலகத்தைவிட மிகவும் பெரியது ஆகும்.


விளக்கவுரை:

‘செய்யாமல் செய்த உதவிக்கு’ அடுத்து ‘காலத்தினால் செய்த உதவி’ உயர்ந்ததாக வைக்கப்படுகிறது. ஒருவனின் நெருக்கடி நேரத்தில் செய்த உதவி சிறியதாயினும் அது செய்யப்பட்ட காலத்தை நோக்க அது இந்த உலகத்தின் அளவைவிட மிகவும் பெரியது என்று கூறும்பொழுது உதவியினுடைய கண்ணில் காணமுடியாத பருப்பொருள் அளவும் அதனின் சிறப்பும் கூறப்பட்டது.



குறள் 103

பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


சொல்லுரை:

பயன்தூக்கார் - பயனை எதிர்நோக்காமால்

செய்த - ஒருவர் மற்றவர்க்கு செய்த

உதவி - உதவியின்

நயன்தூக்கின் - சிறப்பை ஆராய்ந்தால்

நன்மை - அதன் நன்மை

கடலின் - கடலைவிடப்

பெரிது - பெரியதாகும்.


பொருளுரை:

பயனை எதிர்நோக்காமால் ஒருவர் மற்றவர்க்கு செய்த உதவியின் சிறப்பை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.


விளக்கவுரை:

‘பயன் தூக்கார் செய்த உதவி’ எவ்வகை சிறப்புடைத்து என்பது இக்குறளால் கூறப்பட்டது. எந்தப் பயனையும் எதிர்ப்பார்க்காமல் ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவியானது தன்னலமற்ற உதவியாகும். அதனால் நன்மை மட்டுமே விளையும். அந்த நன்மை கடலின் அளவைவிட மிகப் பெரியதாகும்.



குறள் 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.


சொல்லுரை:

தினைத்துணை - தினையளவு

நன்றி - நன்மையைச்

செயினும் - செய்தாலும்

பனைத்துணையாக் - பனை அளவாக

கொள்வர் - எண்ணிக் கொள்வர்

பயன் - அதன் பயனை

தெரிவார் - ஆராய்கின்றவர்


பொருளுரை:

தினையளவு நன்மையைச் செய்தாலும் பனை அளவாக எண்ணிக் கொள்வர் அதன் பயனை ஆராய்கின்றவர்.


விளக்கவுரை:

உதவியின் அளவையும் அதனால் உண்டாகும் நன்மையின் அளவையும் மனிதனின் மனம் என்ற அளவுகோலை வைத்து எடுத்துரைக்கின்றது இக்குறள். செய்த உதவி சிறிய அளவினதாயினும் அதனால் உண்டாகும் பயனை அறிந்தவர்கள் சிற்றறிவிற்கு எட்டாத அதனின் உண்மை அளவையும் தெரிந்தவராயினர்.



குறள் 105

உதவி வரைத்தன் றுதவி வுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.


சொல்லுரை:

உதவி - பிறருக்குச் செய்யும் உதவியானது

வரைத்தன்று - அளவைப் பொறுத்தது அல்ல

உதவி - உதவி

உதவி - உதவியைப்

செயப்பட்டார் - பெற்றுக்க்கொண்டவரின்

சால்பின் - தகுதியின்

வரைத்து - அளவுடையது


பொருளுரை:

பிறருக்குச் செய்யும் உதவியானது உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. உதவியைப் பெற்றுக்க்கொண்டவரின் தகுதியின் அளவைப் பொறுத்தது.


விளக்கவுரை:

உதவியின் அளவானது உதவியை பெற்றுக்கொண்டவரின் தகுதியையும் பொருத்தது என்பதற்கானது இக்குறள். எவ்வகை உதவி செய்யினும் அது தகுதியற்றவரை சென்றடையுமாயின் அந்த உதவியின் அளவு சிறியதாம். ஏனெனில் அதனால் விளையும் நன்மையும் சிறியது என்பதனால்.



குறள் 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.


சொல்லுரை:

மறவற்க - மறவாதிருக்க

மாசுஅற்றார் - குற்றம் அற்றவரின்

கேண்மை - உறவினை, அண்மையை

துறவற்க - கைவிடாதிருக்க

துன்பத்துள் - துன்பம் வந்த காலத்தில்

துப்பாயார் - உதவியாக இருந்தவர்களின்

நட்பு - நட்பினை


பொருளுரை:

குற்றம் அற்றவரின் உறவினை மறவாதிருக்க வேண்டும். துன்பம் வந்த காலத்தில் உதவியாக இருந்தவர்களின் நட்பினை கைவிடாதிருக்க வேண்டும்.


விளக்கவுரை:

குற்றமற்றவர்களின் உறவினை நாம் என்றும் மறக்கக்கூடாது. ஏனெனில், அவர்களின் அருகாமையில் இருப்பதே தம்மை என்றும் நல்வழியில் இட்டுச்செல்லும். அதுபோன்று, தனக்கு துன்பம் வந்த காலத்தில் உதவி செய்தவர்களின் நட்பினை என்றும் கைவிடாதிருக்கவேண்டும். அந்த நட்பினை என்றும் பாராட்டிப் பாதுகாக்கவேண்டும்.



குறள் 107

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.


சொல்லுரை:

எழுமை - எழுகின்ற, தோன்றுகின்ற

எழுபிறப்பும் - ஏழு பிறப்பிலும்

உள்ளுவர் - எண்ணிப் போற்றுவர்

தம்கண் - தனக்கு ஏற்பட்ட

விழுமம் - துன்பத்தை

துடைத்தவர் - நீக்கியவருடைய

நட்பு - நட்பினை


பொருளுரை:

தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கியவருடைய நட்பினை ஒருவர் தான் இவ்வுலகில் தோன்றுகின்ற் ஏழு பிறப்பிலும் எண்ணிப் போற்றுவர்.


விளக்கவுரை:

ஒவ்வொருவரும் இவ்வுலகில் ஏழு பிறவி எடுப்பதாக நம்முடைய முன்னோர்களால் உணரப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவரின் நட்பினை தான் இவ்வுலகில் எடுக்கும் ஏழு பிறப்பிலும் மறக்கக்கூடாது. அவர்களின் நட்பினை உள்ளத்தில் இருத்தி என்றும் போற்றவேண்டும். துன்பத்தில் உதவி செய்பவர்களின் உயர்வினை எடுத்துரைக்க அதனை ஏழு பிறப்பிலும் எண்ணிப் போற்ற வேண்டும் எனப்பட்டது.



குறள் 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.


சொல்லுரை:

நன்றி - பிறர் செய்த உதவியை

மறப்பது - மறப்பது

நன்றுஅன்று - நல்ல பண்பு ஆகாது, அறம் அன்று.

நன்றுஅல்லது - அவர் செய்த தீமையை

அன்றே - செய்த அப்பொழுதே

மறப்பது - மறப்பது

நன்று - நல்ல பண்பாகும், அறமாகும்.


பொருளுரை:

பிறர் செய்த உதவியை மறப்பது நல்ல பண்பு ஆகாது; அறமும் அன்று. அவர் செய்த தீமையை, செய்த அப்பொழுதே மறப்பது நல்ல பண்பாகும்; அறமும் ஆகும்.


விளக்கவுரை:

செய்ந்நன்றி மறவாது இருத்தல் எவ்வளவு முக்கியமோ அதுபோன்று தனக்கு செய்யப்பட்ட தீமையையும் அப்பொழுதே மறத்தல் முக்கியமானதாகும். இல்லையெனில், தன்னுடைய மனத்தில் வன்ம எண்ணங்களை உண்டாக்கி தீய வழியில் நடத்திச் சென்றுவிடும்.



குறள் 109

கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.

கொன்றுஅன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


சொல்லுரை:

கொன்றுஅன்ன - கொன்றதைப் போன்ற

இன்னா - துன்பத்தைச்

செயினும் - செய்தாலும்

அவர்செய்த - முன்பு அவர் செய்த

ஒன்றுநன்று - ஒரு நன்மையை

உள்ளக் - நினைக்கக்

கெடும் - கெடும்


பொருளுரை:

ஒருவர் தனக்கு கொன்றதைப் போன்ற துன்பத்தைச் செய்தாலும் முன்பு அவர் செய்த ஒரு நன்மையை நினைக்கக் கெடும்.


விளக்கவுரை:

கொலைக்கு நிகரான துன்பத்தைச் செய்தாலும் அந்த தீமையையும் மறந்துவிடுதல் நலம். ஓருவர் தனக்கு தீமை செய்வாராயின், அவர் தனக்கு முன்பு ஒரே ஒரு உதவியைச் செய்திருந்தாலும் அவர் செய்த அந்த ஒரு உதவியை உள்ளத்தில் நினைத்துப்பார்க்கும்பொழுது அவர் செய்யும் தீமையானது தன் எண்ணத்தில் இருந்து நீங்கும். ஒருவர் செய்த நன்மையின் பொருட்டு அவர் செய்யும் தீமைகளை பொறுத்துக்கொள்ளுதலே அறமாகும்.



குறள் 110

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


சொல்லுரை:

எந்நன்றி - எத்தகைய அறத்தை

கொன்றார்க்கும் - அழித்தவர்க்கும்

உய்வுஉண்டாம் - தப்பிக்கும் வழி உண்டு

உய்வுஇல்லை - அப்பாவத்திலிருந்து நீங்கும் வழியில்லை

செய்ந்நன்றி - பிறர் செய்த உதவியை

கொன்ற - மறந்த

மகற்கு - மனிதனுக்கு


பொருளுரை:

எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் செய்த பாவத்திலிருந்து தப்பிக்கும் வழி உண்டு. பிறர் செய்த உதவியை மறந்த மனிதனுக்கு அப்பாவத்திலிருந்து நீங்கும் வழியில்லை.


விளக்கவுரை:

கொலைச்செயல் எவ்வளவு பாவமானதோ அதைவிடக் கொடிய பாவமானது செய்ந்நன்றி மறத்தல். அப்பாவத்தினின்று நீங்கவும் வழியில்லை என்பதாம்.



uline