அங்கவியல்

96. குடிமை

( நற்குடியில் பிறந்தவரின் பண்பு )

951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
        செப்பமு நாணு மொருங்கு.

952. ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
        மிழுக்கார் குடிப்பிறந் தார்.

953. நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
        வகையென்ப வாய்மைக் குடிக்கு.

954. அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
        குன்றுவ செய்த லிலர்.

955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
        பண்பிற் றலைப்பிரித லின்று.

956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
        குலம்பற்றி வாழ்துமென் பார்.

957. குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
        மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.

958. நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
        குலத்தின்க ணையப் படும்.

959. நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
        குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

960. நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
        வேண்டுக யார்க்கும் பணிவு.