அங்கவியல்

101. நன்றியில்செல்வம்

( நன்மை பயவாத செல்வம் )

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்
          செத்தான் செயக்கிடந்த தில்.

1002. பொருளானா மெல்லாமென் றீயா திவறு
          மருளானா மாணாப் பிறப்பு.

1003. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
          தோற்ற நிலக்குப் பொறை.

1004. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா
          னச்சப் படாஅ தவன்.

1005. கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய
          கோடியுண் டாயினு மில்.

1006. ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
          றீத லியல்பிலா தான்.

1007. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
          பெற்றா டமியண்மூத் தற்று.

1008. நச்சப் படாதவன் செல்வ நடுவூரு
          ணச்சு மரம்பழுத் தற்று.

1009. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
          வொண்பொருள் கொள்வார் பிறர்.

1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
          வறங்கூர்ந் தனைய துடைத்து.